Back to Articles

அற்புதங்கள் ஒன்றா... இரண்டா...!

அருள் திரு அம்மா அவர்களின் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.

எங்கள் குடும்பங்களில் அனைவரும் அம்மாவின் பக்தர்கள். அம்மா எங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் நான் சாதாரண நிலையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். என் வீட்டின் பக்கத்தில் ஒரு சக்தி சக்திமாலை போடுவார்கள்.

என் குடும்பம் அப்போது மிகுந்த கஷ்டத்தில் இருந்தது. எனக்கு மூன்று குழந்தைகள். என் கணவருக்கோ நிரந்தர வேலையும் இல்லை.

அந்தச் சமயத்தில் அந்த சக்தி என்னையும் இருமுடி சுமந்து மாலையிட்டு வருமாறு அழைத்தார்கள். எனக்கு அப்போது அம்மா மீது நம்பிக்கை இல்லை.

இரண்டு வருடம் சென்றதும் அவர்கள் மறுபடியும் கூப்பிட்டார்கள். சரி என்று கூறி அரை மனதுடன் 1993ல் சக்திமாலை போட்டுச் சென்றேன்.

ஐந்து வருடம் சென்றேன். நம்பிக்கை சிறிது துளிர்விட்டது. அந்த ஐந்து வருடமும் அம்மா என் குடும்பத்தைக் கைவிடக் கூடாது என்று கருதியிருக்கிறார்கள்.

என் குடும்பத்தில் அந்த ஐந்து வருடமும் படிப்படியாக முன்னேற்றம். அப்போது அம்மாவின் கருணையை உணர்ந்தேன்.

என் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் உடல் நலம் சரியில்லாமல் போனது. பரிசோதித்துப் பார்த்ததில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்ய அவர் உடலில் தெம்பு இல்லை. இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவிடம் அழுது புலம்பினேன். மறுபடியும் பரிசோதித்ததில் மருத்துவர்களே கடவுள் தான் காப்பாற்றியிருக்கிறார், உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றார்கள். அம்மாவின் கருணையால் அறுவை சிகிச்சை செய்து நலமாக இருக்கிறார்.

எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும். நீதான் கட்டித் தர வேண்டும் என்று அம்மாவிடம் வேண்டினேன்.

அம்மா எங்கள் ஊரில் ஒரு சொந்தவீடு அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததே அம்மாதான்.

ஏனெனில் அந்த வீட்டின் காங்கிரீட் போடும் போது எங்கள் ஊரில் பயங்கர மழை. அந்த மழையால் சிமெண்டும், வீடும் இடிந்து கரைந்து விடும் போலிருந்தது.

‘எனக்கு கஷ்டம் தராதே அம்மா, என் வீட்டைக் காத்துக் கொடு, வேலை கெட்டுப் போகுதே அம்மா’ என்று வேண்டினேன். என்னே அதிசயம்!

எல்லா இடத்திலும் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டின் மேலே மட்டும் தேவையான அளவு மிதமான தண்ணீரே தூறியது.

என் தம்பிக்கும், வேலை செய்பவர்களுக்கும், எல்லோருக்கும் ஒரே அதிசயமும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அவர்கள், ‘சுத்தியும் கன மழை பெய்கிறது. ஆனால் உங்கள் வீட்டின் மேல் மட்டும் மழை தூறல்தான் சாரல் போல் வருகிறது. எப்படி?’ என்றார்கள்.

ஆனால் நானோ எதையும் கவனிக்காமல் ‘ஓம்சக்தி! பராசக்தி!’ என்று கூறிக் கொண்டிருந்தேன். மூலமந்திரமும் கூறி வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். வேலை முடியும் வரை மிதமான மழையே பெய்து கொண்டிருந்தது.

அன்று என் தம்பிக்கு அவனுடைய நண்பர்களெல்லாம் போன் செய்து ‘உங்கள் வீடு என்ன ஆச்சு. இங்கு எல்லோரோட வீடும் சிமிண்டும் மழையில் கரைந்து எல்லாம் போச்சு. உங்க அக்கா வீடு என்னாச்சு?’ என்று கேட்டார்கள்.

அப்போது என் தம்பி அவர்களிடம் ‘என் அக்கா அம்மாகிட்ட வேண்டிக்கிட்டாங்க. அதனால ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வீட்டின் மேல் மழை லேசாகத்தான் பெய்தது’ என்று நடந்ததைக் கூறினான். எல்லோரும் அதிசயித்தார்கள்.